Pages

எப்படி சொல்வேன்?

அவள்
பார்த்துக்கொண்டேயிருக்கிறாள்..
சிற்சில சமயம்
சிறு புன்னகையொன்றை
உதிர்த்தும் கொள்கிறாள்...
என் குத்திட்ட கண்கள்
அவள் மேலேயே
நிலைத்து நிற்கிறது...
இடுப்பில் கையூன்றி
குறுநகையோடு முறைக்கிறாள்...
நாக்கு துருத்தி,
கொம்புகள் வைத்து
பழித்தும் காட்டுகிறாள்...
கோபமா இயலாமையாவென
வரையறுக்க தெரியவில்லை.
உணர்ச்சிகளற்ற பாவத்தில்
இன்னமும் உறைந்திருக்கிறேன்...
மிதந்துக் கொண்டிருந்தவள்
இறங்கி வருகிறாள்...
நாடி தாங்கி
கண்கள் நோக்குகிறாள்...
என்னடாவென
தலையும் கோதுகிறாள்...
நெருங்கிய அவள்
ஆடையின் வாசம்
கொஞ்சம் ஆசுவாசப்படுத்துகிறது...
பெருமூச்சொன்றை இழுத்துக்கொண்டு
ஒருதரம் அவளை
சுவாசித்துக் கொள்கிறேன்...
எப்படி சொல்வேன்?
கதறி அழ முடியாமல்
வெதும்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை...
அழ விடுவாயா?
காரணங்கள் கேட்டு
திணற வைக்காமல்...
ஒரு அரைமணி நேரம்
என்னைப் பொறுத்துக்கொள்வாயா?
தொண்டைக்குள் சிக்கிய
வார்த்தைகளை
வலிமையோடு விழுங்கிக்கொள்கிறேன்...
நான் எதுவும் சொல்வதாயில்லை...
புரிந்துக் கொண்டிருப்பாள்..
என்
உணர்வறியாதவளா அவள்?
கை நீட்டி இழுத்துக்கொண்டு
முதுகோடு சேர்த்தணைத்து
அதே குறுநகையோடு
வாய்த் திறந்தாள்...
அழுது விடு...

No comments:

Post a Comment